இலவசப்பொருட்களை வழங்க நிதி ஒதுக்கியும் அலைக்கழிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள்
இலவசப்பொருட்களை வழங்க நிதி ஒதுக்கியும் அலைக்கழிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள்
ADDED : மே 27, 2025 10:31 PM
விருதுநகர்:தமிழகத்தில் விலையில்லாப்பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு செல்ல நிதி ஒதுக்கியும், தலைமை ஆசிரியர்களையே எடுத்து செல்ல வட்டாரக்கல்வி அலுவலகங்கள் நிர்பந்திக்கின்றன. இதனால் மூன்று பருவங்களுக்கும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள், நோட்புக், கிரையான்ஸ், காலணிகள் உள்ளிட்ட 14 விலையில்லா பொருட்களை தமிழக அரசு வழங்குகிறது. இந்த 14 பொருட்களும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே முழுதும் கிடைக்கிறது. தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. மூன்று பருவங்களாக கற்றல் பணி நடக்கும் நிலையில் ஆண்டுக்கு 4 சீருடைகள் வழங்கப்படுகின்றன. புத்தகங்கள் பருவங்கள் தோறும் மாறுபடும். இந்நிலையில் விலையில்லா பொருட்களை பள்ளிகளுக்கு வழங்க 'ரூட் மேப்' அமைத்து பள்ளிகளுக்கான வழித்தடம் ஏற்படுத்தவும், அதை முறைப்படி வழங்கவும் வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இதை வட்டாரக்கல்வி அலுவலகத்தில் முறையாக பயன்படுத்துவது கிடையாது. தலைமை ஆசிரியர்களை நேரில் வரவழைத்து கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிக்கு பொருட்களை எடுத்து செல்ல வைக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைமை ஆசிரியர்களை கண்டு கொள்ளாமல் விடுகின்றனர்.
இதனால் இரு தரப்பு பிடிவாதத்தாலும் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் கிடைக்காத பள்ளிகளும் உள்ளன. அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி 'ரூட் மேப்' மூலம் சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி ரூட் மேப் அமைத்து பள்ளிகளுக்கே நேரடியாக விலையில்லாப்பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கல்வியாண்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்தாண்டிலும் இது தொடர்வதாக தலைமை ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர்.

