ADDED : ஆக 08, 2025 11:44 PM
சென்னை:கடந்த மூன்று ஆண்டுகளில், முன்விரோதம் காரணமாக, 475 கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கான காரணங்களில், முதல் மூன்று இடங்களில், குடும்ப தகராறு, வாய் தகராறு மற்றும் முன்விரோதம் ஆகியவை உள்ளன. அந்த வகையில், முன்விரோதம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில், 475 கொலைகள் நடந்துள்ளதாக, போலீஸ் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
விசாரணை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, முன்விரோத கொலைகள் அதிகரித்து வருகின்றன. பிரச்னைகளை தீர்த்து வைப்பதில், போலீஸ் அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை.
குற்றம் செய்தவர் தண்டிக்கப்படும்போது, எதிர் தரப்பினர் மீது கோபம் கொள்வது இயல்பு. இந்த பகை வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, போலீசாருக்கு உள்ளது.
முன்விரோதம் காரணமாக, பழிக்கு பழி வாங்க துடிப்போரை ரகசியமாக கண்காணித்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இத்தகையை கொலைகள் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.