கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம்
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம்
ADDED : ஏப் 10, 2025 06:09 AM

சென்னை: ''கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பி. அமுதா கூறியதாவது:
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலை நிலவரப்படி, அதே இடத்தில் தொடர்கிறது. இது அடுத்த, 12 மணி நேரத்தில், வடக்கு திசையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு நகரக்கூடும்.
அதன்பின், வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதியில், படிப்படியாக வலுவிழக்கக் கூடும். இதே சமயத்தில், மத்திய மேற்கு வங்கக்கடலில் இருந்து, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வரை, ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில், ஏப்., 15 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தில் ஒருசில இடங்களில், வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
மத்திய வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில், மணிக்கு 35 கி.மீ., முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெயில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில் அதிகபட்சமாக, 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோட்டில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

