UPDATED : ஆக 06, 2025 07:58 AM
ADDED : ஆக 06, 2025 06:18 AM

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 06) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், புதுச்சேரி நகர பகுதியில் அதிகபட்சமாக, 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதிகளில், தலா 10; திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டை 9; தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார், திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயம், புதுச்சேரி பத்துகண்ணு பகுதியில் தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய இடங்களில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று டன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக., 11 வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஒருசில இடங்களில், இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிபேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.