ADDED : செப் 16, 2025 06:16 AM

சென்னை : 'தமிழகத்தில் சேலம், வேலுார், திருவண்ணாமலை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.