ADDED : அக் 11, 2025 08:16 PM
சென்னை:கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில், 18 செ.மீ., மழை பெய்து ள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணையில், 9; கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் தலா, 7 செ.மீ., மழை பெய்து உள்ளது.
தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள பகுதிகளில், இருவேறு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அக்., 17 வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.