6 மாவட்டங்களில் இன்று கனமழை: நீலகிரியில் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
6 மாவட்டங்களில் இன்று கனமழை: நீலகிரியில் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
UPDATED : ஜூன் 16, 2025 06:40 AM
ADDED : ஜூன் 16, 2025 06:23 AM
முழு விபரம்

சென்னை: 'கோவை, நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று (ஜூன் 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, நீலகிரியில் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அம்மாவட்டத்திற்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 தாலுகாவில் விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று 16ம் தேதி உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்தார்.
வால்பாறைக்கு விடுமுறை
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்யும் கனமழையால் அந்த தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று கோவை கலெக்டர் விடுமுறை அறிவித்தார்.