ADDED : மே 21, 2026 02:31 AM
சென்னை: 'கோவை, நீலகிரி உட்பட ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், வரதனப்பள்ளியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை, லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகம், ஆந்திர பிரதேசம் வழியாக, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
எனவே, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
