ADDED : ஜன 12, 2026 06:23 AM

சென்னை: 'வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மாறிய நிலையில், இன்று ஏழு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது.
அதன் அறிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
அதன்பின், மேலும் வலுவிழந்து, மன்னார் வளைகுடா பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. நேற்று காலை நிலவரப்படி, இந்த அமைப்பு மீண்டும் வலுவிழந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவியது.
இதனால், தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேநேரத்தில், கடலுார், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும், கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும், வரும் 15 முதல் 17ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

