காற்றழுத்தம் வலுவிழந்தாலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்தம் வலுவிழந்தாலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ADDED : நவ 14, 2024 05:54 AM

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததால், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. அதே நேரம், 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11ம் தேதி உருவானது.
அன்று இரவு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. அதன் அடிப்படையில், சென்னைக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததால், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளது. இருப்பினும் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
அதே நேரத்தில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கேரள கடலோரப் பகுதிளை ஒட்டி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி - மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 19 வரை இது நீடிக்கும்.
இன்று
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை.
சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில்...
கனமழைக்கான எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாகக் காணப்படும்; ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.