ADDED : ஜூலை 22, 2025 07:46 AM

சென்னை : 'வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இம்மாதம் 27ம் தேதி வரை, தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

