ADDED : மே 16, 2026 03:53 AM

சென்னை: விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அதே இடத்தில் தொடர்கிறது.
இதனால், தென் மேற்கு வங்கக் கடல், தெற்கு வங்கக் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில், தென் மேற்கு பருவ மழை இன்று தொடங்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தேனி ஆகிய மாவட்டங்களில், இன்று இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
