ADDED : பிப் 06, 2024 11:11 PM
சென்னை:சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், 'இம்காப்ஸ்' நிறுவனம், மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகள், கால்நடைகளுக்கும் பல்வேறு விதமான மூலிகை மருந்துகளை தயாரிக்க உள்ளது.
அந்த வகையில், யானைகள், மாடுகள், நாய்கள், மீன்கள், பூனைகள், குதிரைகள் உள்ளிட்டவற்றிற்கு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது.
இம்மருந்துகள் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
இதுகுறித்து, இம்காப்ஸ் இயக்குனர் டாக்டர் மீரா சுதிர் கூறியதாவது:
இம்காப்ஸ் நிறுவனம் டாக்டர் கண்ணன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் உள்ள முன்னோர்களின் நுால்களை ஆராய்ந்து, அதற்கேற்ப மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
பசுமாடு பால் அதிகம் சுரக்க சில ஊசிகள் போடப்படுகின்றன. அப்பாலை குடிக்கும் மனிதர்களுக்கும், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இவற்றை தவிர்க்க, ஆரைக்கீரையை பயன்படுத்தி, மூலிகை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவற்றால், பாலில் உள்ள தைராய்டு தன்மை மிதமான அளவில் காணப்படும்.
அதேபோல, நெல்லிக்காய் லேகியம் போன்றவை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, தோல்நோய் பாதிப்புக்கும் மூலிகை மருந்து வர உள்ளது. நாய்களுக்கு அதிகம் மஞ்சள்பொடி தைலம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது கோடைகாலம் வர உள்ள நிலையில், யானைகளின் புத்துணர்ச்சிக்கான மருந்துகளும் தயாரிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் உள்ளன.
அம்மருந்துகள், வரும் யானைகள் புத்துணர்ச்சி முகாம்களில் பயன்படுத்தப்படும்.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையில் எங்களுக்கு உதவியாக இருப்பதால், மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் ஆயுஷ் மருத்துவத்தில் மருந்துகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

