வெறுப்பு பேச்சுக்களை தவிருங்க 'மாஜி'க்கு ஐகோர்ட் அறிவுரை
வெறுப்பு பேச்சுக்களை தவிருங்க 'மாஜி'க்கு ஐகோர்ட் அறிவுரை
ADDED : ஏப் 05, 2025 02:52 AM
சென்னை:'எதிர்க்கட்சி என்ற முறையில், விமர்சனம் செய்ய உரிமை இருந்தாலும், பொது வெளியில் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதுாறாக பேசியதாக, சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்குகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் பயன்படுத்திய வார்த்தை வேண்டுமானால், ரசிக்கக்கூடிய வகையில் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அவரது பேச்சை பொதுமக்கள் பார்வையில் இருந்து அணுக வேண்டும். விசாரணை நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததே தவறு.
முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி., என்ற முறையில், முதல்வர் குறித்து விமர்சிக்கும் போது, மனுதாரர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
பேச்சுரிமை இருந்தாலும் கூட, முதல்வர் குறித்தோ, அரசு குறித்தோ பேசும் போது, பொது வெளியில் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

