ADDED : ஆக 05, 2025 11:15 PM
சென்னை:''ராமாயணத்தில் ராவணனின் தலை, ஒவ்வொரு முறை வெட்டப்படும் போது, மீண்டும், மீண்டும் முளைப்பது போல், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்கள், இணைய தளங்களில் உலா வருவது வேதனை அளிக்கிறது,'' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
பெண் வழக்கறிஞர், தன் கல்லுாரி காலத்தில், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டன. அவற்றை நீக்க, உரிய நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ''பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், மேலும் 13 இணையதளங்களில் பரவி உள்ளது. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.குமரகுரு ஆஜராகி, ''மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இப்பிரச்னையை கையாள ஒரு குழு அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் வீடியோ உலாவும் தளங்கள் தடுக்கப்பட்டு, மீண்டும் அவை வராமல் இருப்பதை குழு உறுதி செய்யும்.
இது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, ''ராமாயணத்தில் ராவணனின் தலை, ஒவ்வொரு முறை வெட்டப்படும் போதும், மீண்டும், மீண்டும் முளைப்பது போல், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோக்கள், மீண்டும் மீண்டும் இணையத்தில் உலாவருவது கவலை அளிக்கிறது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, சட்ட விரோத இணைய தளங்களை முடக்கியது போல், தனி ஒருவருக்காக இந்த இணையதளங்களையும் முடக்க, மத்திய அரசு அமைத்துள்ள குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.