தென்காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஐகோர்ட் தடை
தென்காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஐகோர்ட் தடை
ADDED : ஏப் 04, 2025 02:15 AM
மதுரை:தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில், வரும் 7ல் கும்பாபிஷேகம் நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
தென்காசி, நம்பிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தென்காசி, காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைப்படி புனரமைப்பு பணி நடக்கவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பணியை மேற்கொள்கிறார்.
கோவில் வளாகத்திலிருந்து அனுமதியின்றி தோண்டி, அள்ளிய மணலை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். வருமானத்தை கோவில் கணக்கில் வரவு வைக்கவில்லை.
ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவை சரிசெய்யவில்லை. எலக்ட்ரிக் வேலை முழுமையடையவில்லை.
சுவாமி புறப்பாடு வாகனங்களை சீரமைக்கவில்லை. தேர் திருப்பணி துவங்கவில்லை. புனரமைப்பு பணி முழுமையடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
நேற்று முன்தினம் விசாரணையின் போது அரசு தரப்பு, 'புனரமைப்பு பணி 100 சதவீதம் முடிந்துவிட்டது' என, தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் தரப்பு, 'புனரமைப்பு பணி முழுமையடையவில்லை. 81 மரங்களில், 31 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசு தரப்பின் அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன' எனக்கூறி, போட்டோ ஆதாரங்களை சமர்ப்பித்தது.
இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'கோவிலை ஆய்வு செய்ய இரண்டு நிபுணர்கள் கொண்ட குழுவை சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் நியமிக்க வேண்டும்.அக்குழுவுடன் ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் ஆனந்தவள்ளியை கமிஷனராக நியமிக்கிறோம். அவர்கள் வரும் 21ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

