பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகள்பலியிட தடை கோரிய வழக்கு; பதில் தர உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம்
பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகள்பலியிட தடை கோரிய வழக்கு; பதில் தர உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம்
ADDED : அக் 09, 2025 05:25 AM

மதுரை : பக்ரீத் பண்டிகையையொட்டி அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பக்ரீத் பண்டிகையையொட்டி பசுக்கள், எருமைகள், காளைகள், ஆடுகளை ஆண்டுதோறும் திறந்த வெளியில் சட்டவிரோதமாக பலியிடுவது வாடிக்கையாகிவிட்டது. தனிநபர்களால் கால்நடைகளை சட்டவிரோதமாக பலியிடுவதை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. கால்நடைகளை நாட்டின் பல பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவருகின்றனர். மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதை தடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எங்கும் கால்நடைகளை பலியிட தடை விதிக்க வேண்டும்.
மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்பு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தற்போது செயல்பாட்டிலுள்ள இறைச்சிக்காக கால்நடைகளை வதை செய்யும் கூடங்களின் எண்ணிக்கை, அவை உரிமங்கள் பெற்றுள்ளனவா, விதிகள்படி செயல்படுகின்றனவா என்பது குறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், சட்டத்துறை செயலர், கால்நடைத்துறை இயக்குனரகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜராகி அவகாசம் கோரினார். நீதிபதிகள் அறிக்கை தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கி விசாரணையை நவ.5 க்கு ஒத்திவைத்தனர்.