மரக்காணம் கலவர இழப்பை வசூலிக்கும் விவகாரம் முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கெடு
மரக்காணம் கலவர இழப்பை வசூலிக்கும் விவகாரம் முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கெடு
ADDED : ஜூன் 05, 2025 12:40 AM
சென்னை: மரக்காணம் கலவரத்தால் ஏற்பட்ட இழப்பை, பா.ம.க.,விடம் இருந்து வசூலிப்பது தொடர்பான விசாரணையை, சட்டப்படியும், உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் நடத்தி, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், கடந்த 2013ல், வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடந்தது. அதில் பங்கேற்க வந்தவர்களால், மரக்காணம் பகுதியில் கலவரம் நடந்தது.
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகள் தீ வைக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை, பா.ம.க.,விடம் இருந்து வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரித்து வருகிறார்.
தடை விதிக்க வேண்டும்
'இந்த விசாரணை, தமிழக பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை. இது சம்பந்தமாக இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'இழப்பீடை தீர்மானிக்கும் முன், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என, ஆரம்ப கட்ட விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
'அதை பின்பற்றாமல், இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்தக் கூடாது.
'மேலும், இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும்.
'சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல், இழப்பீடு குறித்து, இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
வழக்கு தாக்கல்
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மணி சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர்கள் கே.பாலு, ஜோதிமணியன்; அரசு, டாஸ்மாக் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, 'வெறும் அச்சத்தின் அடிப்படையில் வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
'உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையிலும், சட்ட விதிகளின்படியும் விசாரணை நடத்தப்படும்' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, எட்டு வாரங்களில் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.