அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற உயர் நிலைக்குழு உயர் நீதிமன்றம் அவகாசம்
அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற உயர் நிலைக்குழு உயர் நீதிமன்றம் அவகாசம்
ADDED : பிப் 20, 2024 12:14 AM
மதுரை:மாநகராட்சிகள், நகராட்சிகளில் அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணித்து அகற்ற, உயர்நிலைக் குழுவை அமைக்க அரசாணை பிறப்பிக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அவகாசம் அளித்தது.
தென் மாவட்டங்களில் விதிமீறல் கட்டுமானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, பல்வேறு வழக்குகள் தாக்கலாகின. ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக்கோரி அல்லது அனுமதிக்கு புறம்பாக விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொண்டது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நீதிமன்றம், பல சந்தர்ப்பங்களில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
தங்கள் அதிகார வரம்பிற்குள் அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துாக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனுமதியற்ற கட்டுமானங்களை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம்.
அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணித்து அகற்ற உயர்நிலைக் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவை பிறப்பிக்க இது சரியான நேரம். அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
மீண்டும் விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு:
சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற கட்டுமானங்களை தடுக்க, அந்த மாநகராட்சி கமிஷனர் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு ஆவணம் சமர்ப்பித்தது.
அரசின் விரைவான நடவடிக்கையை கருதி, அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.
அதுபோல, மாநிலத்திலுள்ள பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் தொடர்பாக அரசாணைகள் பிறப்பிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
விசாரணை மார்ச் 4க்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் ஒத்திவைக்க அவகாசம் வழங்கப்படாது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

