இளையராஜா வழக்கில் பதிலளிக்க வனிதாவுக்கு ஐகோர்ட் கெடு
இளையராஜா வழக்கில் பதிலளிக்க வனிதாவுக்கு ஐகோர்ட் கெடு
ADDED : ஜூலை 15, 2025 06:43 AM

சென்னை; 'மிஸஸ் அண்டு மிஸ்டர்' திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை நீக்க உத்தரவிடக்கோரி, இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, நடிகை வனிதாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் நடிகை வனிதா இயக்கி நடித்த, 'மிஸஸ் அண்டு மிஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை, வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார்.
இந்த படத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்து, 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற, 'ராத்திரி சிவ ராத்திரி' பாடல் இடம் பெற்றுள்ளது.
தான் இசையமைத்த பாடலை அனுமதியில்லாமல், அப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும், இளையராஜா தரப்பில், உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
காப்புரிமை மீறிய செயல் என்பதால், உடனடியாக அப்பாடலை, அத்திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று, கோரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதோடு, அவரின் பெயரும் பட விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இளையராஜா தரப்பில் வாதாடப்பட்டது.
வனிதா விஜயகுமார் தரப்பில், 'எக்கோ, சோனி நிறுவனத்திடம் அனுமதி பெற்று, பாடல் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், காப்புரிமை மீறல் எதுவும் இல்லை. மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்' என, கேட்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு வனிதா தரப்பில் பதிலளிக்க, ஒரு வாரம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.