மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2025 03:08 AM
மதுரை:மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தப்படுவதை மக்கள் நல அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் கண்ணன் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் - திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோருக்கு மது அருந்துவோரால் இடையூறு ஏற்படுகிறது. கடையை மூடக்கோரி திண்டுக்கல் கலெக்டர், மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு 2024 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
டாஸ்மாக் தரப்பு: இரு வெவ்வேறு பள்ளிகள் 30 மற்றும் 50 மீட்டரில் அமைந்துள்ளன. வழிபாட்டுத்தலம் குறுகிய துாரத்திலும், அரசு மருத்துவமனை 100 மீட்டரிலும் அமைந்துள்ளது என மனுதாரர் கூறுவது தவறானது. மாநகராட்சி எல்லைக்குள் வணிக பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. பள்ளி, வழிபாட்டுத்தலம், மருத்துவமனையிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் டாஸ்மாக் இருக்க வேண்டும் என்ற துாரக் கட்டுப்பாடு விதிமுறை இப்பகுதிக்கு பொருந்தாது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: சில சூழ்நிலைகளில் துார அளவுகோலை கடைபிடிப்பது சரியானதல்ல என இந்நீதிமன்றம் கருதுகிறது. ஒரு டாஸ்மாக் கடை மூலம் அப்பகுதியில் சாலையை பயன்படுத்துவோருக்கு குறிப்பாக பள்ளி நேரங்களில் குழந்தைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.சாலையை பயன்படுத்துவோருக்கு இதுபோன்ற எவ்வித தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை.
அரசு தனது மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வது மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை முதன்மைக் கடமைகளில் ஒன்றாகக் கருத வேண்டும் என இந்திய அரசியலமைப்பு கூறுகிறது. குறிப்பாக மருத்துவ நோக்கங்களுக்குரியதை தவிர, போதை தரும் பானங்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளை உட்கொள்வதை தடை செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என கூறுகிறது.
மக்கள் நல அரசு பொது சுகாதாரத்தை மோசமாக பாதிக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை அமல்படுத்த முழுமனதுடன் பாடுபட வேண்டும் என்பது அரசியலமைப்பின் தத்துவம் மற்றும் வலியுறுத்தும் வழிகாட்டுதல் கொள்கை.மக்கள் நல அரசு ஒருபுறம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை நிறுவுவது முரண்பாடானது. இது அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு இசைவானதல்ல.
சுகாதார உரிமை ஒரு அடிப்படை உரிமையாக இருக்கும்போது, பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, மதுவிலக்கை படிப்படியாக மெதுவாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வழக்கில் ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக மக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும். இக்கடையை 2 வாரங்களில் மூட வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் ஜூன் 18 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.