கைதிகளிடம் பிடித்தம் செய்யும் ஊதியத்தில் முறைகேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
கைதிகளிடம் பிடித்தம் செய்யும் ஊதியத்தில் முறைகேடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 28, 2025 09:59 PM
சென்னை:'சிறையில் பணிபுரியும் கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில், முறைகேடு செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபா லட்சுமி. இவரது கணவர் செந்தில்குமார்; வேலுார் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். தன் கணவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபா லட்சுமி மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை
மனுவில், 'குற்றச்செயலில் ஈடுபட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க, சிறை கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை' என்று, குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய கணக்கு தணிக்கை துறை தரப்பில் வழக்கறிஞர் வி.விஜயசங்கர் ஆஜராகி, ''பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க, பிடித்தம் செய்யப்படும் தொகை, 2021க்கு பின் தணிக்கை செய்யப்படவில்லை. தணிக்கையை முடிக்க மூன்று மாதம் அவகாசம் வேண்டும்,'' என்றார்.
சிறை நிர்வாகம் தரப்பில், 'கணக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறது. எந்த முறைகேடும் நடக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
உத்தரவு
இதையடுத்து, 'மாநிலம் முழுதும், எட்டு மத்திய சிறைகளில் உள்ள கைதிகளின் ஊதியத்தில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பிடித்தம் செய்யப்படும், 20 சதவீத தொகை தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை துறை தலைமை அதிகாரி, குழு அமைத்து, மூன்று மாதங்களுக்குள் தணிக்கை செய்ய வேண்டும்.
'அந்த அறிக்கையை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த அறிக்கை பெற்ற மாநில அரசு, முறைகேட்டில் ஈடுபட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.