விதிமீறல் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவு
விதிமீறல் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கைக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 19, 2025 01:35 AM

மதுரை; சட்டவிரோத மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மது விற்பனை செய்ய அரசியல் செல்வாக்குமிக்கவர்களுக்கு அரசே உரிமம் வழங்குகிறது.
மன்றங்களில் எவ்வித செயல்பாடுகளும் நடப்பதில்லை. அங்கு வருவோருக்கு அடிப்படை வசதி செய்து தருவதில்லை. அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவற்றில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு செய்வதில்லை. விதிகள்படி மனமகிழ் மன்றங்கள் செயல்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் சட்டவிரோத மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் தென்மாவட்டங்களில் சில மனமகிழ் மன்றங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கலாகின.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
காளான்கள் போல் தனியார் மனமகிழ் மன்றங்கள் உருவாகின்றன. கல்வி, சமூக சேவை, விளையாட்டு இடம் பெறும் நோக்கில் துவக்கப்படுகின்றன.
மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மதுவிலக்கு சட்டம், மதுவின் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த கொண்டு வரப்பட்டது.
மக்கள் நல அரசு மதுவிலக்கு சட்டத்தின் நோக்கத்தை ஆக்கப்பூர்வமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மனமகிழ் மன்ற மதுபான கூடங்களில் அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீறினால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
மனமகிழ் மன்றங்கள், அதிலுள்ள மதுபான மதுபான கூடங்கள் பெரும்பாலும் அரசியல் பின்புலம் மிக்கவர்களால் நடத்தப்படுவதாக மனுதாரர்கள் தரப்பு கூறுகிறது. இதனால் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் நிலவுகிறது.
எதிர்காலத்தில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கும்போது அருகில் குடியிருப்பு, மருத்துவமனை, வழிபாட்டு தலம், கல்வி நிறுவனங்கள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்த பின் முடிவெடுக்க வேண்டும்.
மன்றங்களில் போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.
மனமகிழ் மன்றம் எனும் பெயரில் மது விற்பனை செய்யலாமா என்பது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல் இல்லை.
மன்றத்தின் நோக்கத்தில் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களுக்கு மது விற்பனை செய்யப்படும் என்பது இடம்பெறும் வகையில், உரிமம் வழங்குவதில் புது விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

