இலங்கை கைதிக்கு மருத்துவ வசதி வழங்க சிறை நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
இலங்கை கைதிக்கு மருத்துவ வசதி வழங்க சிறை நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : அக் 25, 2025 10:03 PM
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கைதிக்கு மருத்துவ வசதி வழங்க, சிறை நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'உபா' எனும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இலங்கையைச் சேர்ந்த தனுகா ரோசன், 39, என்பவர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில், இவர் தாக்கல் செய்த மனு:
இலங்கையைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டு இருந்தனர். கடந்தாண்டு நடந்த திடீர் சோதனையில், கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தை அடுத்து, அனைவரையும் தனித்தனியே அடைத்து வைத்துள்ளனர்.
தற்போது, சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுகிறது. சிறையில் உள்ள பிரச்னைகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இதையடுத்து, பழிவாங்கும் நடவடிக்கையாக தனிமை சிறைக்கு மாற்றி உள்ளனர். அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டதால், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளேன். இப் பிரச்னைக்கு பயன்படுத்திய மருந்துகளை வலுக்கட்டாயமாக சிறை அதிகாரிகள் பறித்துள்ளனர்.
எனவே, தனிமை சிறையில் இருந்து விடுவிக்கவும், மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்கவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜரானார்.
காவல் துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோகுலகிருஷ்ணன் ஆஜராகி, பதிலளிக்க அவகாசம் கோரினார்.
இதையடுத்து, மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை சிறை நிர்வாகம் செய்து தர நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணையை நவ., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

