ADDED : ஆக 15, 2025 12:53 AM
சென்னை:'துாய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களை உடனே விடுவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் விஜய் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில், 'சென்னையில் துாய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், சட்ட கல்லுாரி மாணவர்கள் காணாமல் போய் உள்ளனர். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், குமாரசாமி, ஆர்.கிருஷ்ணகுமார், வேல்முருகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
காவல்துறை தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டதாவது:
பெண் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது, பேருந்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட காணங்களால், ஆறு வழக்கறிஞர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பின், 'நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வீடியோவை பார்த்தால், கைது செய்த பின்தான் பேருந்து சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
'ஆனால், முன்கூட்டியே வழக்கறிஞர்களை கைது செய்வதற்கு, எந்த காரணங்களும் இல்லை' என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கறிஞர் பாரதி உள்பட ஆறு வழக்கறிஞர்களை உடனே விடுவிக்க உத்தரவிட்டனர்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக இணையதளம் உள்ளிட்டவையில், எவ்வித நேர்காணல், கருத்துகள் ஆகியவற்றை தெரிவிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்து, வழக்கு விசாரணையை வரும், 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.