வங்கி வாயிலாக பொங்கல் பரிசு தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
வங்கி வாயிலாக பொங்கல் பரிசு தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : டிச 04, 2024 12:53 AM
மதுரை:பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் செயலர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்புடன் பணமும் அடங்கிய பரிசுத் தொகுப்பை ரேஷன் கார்டுதாரர்களுக்கு சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்குகிறது.
பரிசுத்தொகை 1,000 ரூபாயை, மகளிர் உரிமைத் தொகை திட்டம் போல, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: வங்கி கணக்கு மூலம் ரொக்கம் பட்டுவாடா செய்வதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன.
குறைந்தபட்ச தொகையை பராமரிக்காவிடில் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்கிறது.
மனுதாரர் தரப்பு: ஏற்கனவே இதுபோல் மனுதாரர் தொடர்ந்த வழக்கில் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரொக்கம் செலுத்துவது பற்றி பரிசீலிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள்: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிடில் அவமதித்தது போலாகும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
'மனுதாரர் அனுப்பிய மனு மீதும், இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டிச., 19ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.