ADDED : டிச 28, 2024 03:17 AM
சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா. கடந்த, 2018ம் ஆண்டில் சமூக வலைதளத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழியை அவமதிக்கும் கருத்துடன் பதிவு வெளியிட்டிருந்தார். அத்துடன், 'திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, இங்கும் நாளை ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவோம்' என, மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விரு கருத்துக்களுக்கு எதிரான புகார்கள் அடிப்படையில் பதிவான வழக்குகளை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இரண்டு வழக்குகளில் எச்.ராஜாவுக்கு, தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, டிசம்பர், 2ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, எச்.ராஜா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுக்களில், 'மூன்றாம் நபர் அளித்த புகாரின்படி பதிவான வழக்கில், நேரடி சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதம். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கில் முடிவு காணும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, மேல்முறையீடு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். இந்த மனுவுக்கு போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.