'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட்டது செல்லும் ஐகோர்ட் தீர்ப்பு
'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட்டது செல்லும் ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : ஆக 12, 2025 03:15 AM
சென்னை: 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு தாக்கப்பட்ட வழக்கில், போலீஸ் டி.எஸ்.பி., 1 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் எட்டுவழி சாலைக்கு, தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து, 2018 ஜூன் 26ல், செங்கம் அருகே நடந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு பங்கேற்றார்.
அப்போது, போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், தன் மீதான போலீசாரின் தாக்குதல் மனித உரிமை மீறல் என்றும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லிபாபு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஆணையம், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, டில்லிபாபுவுக்கு மாநில அரசு 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இந்த தொகையை, செங்கம் டி.எஸ்.பி., சுந்தரமூர்த்தியிடம் 50,000 ரூபாய், இரண்டு எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ராஜசேகர் ஆகியோரிடம் தலா 25,000 ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, டி.எஸ்.பி., சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர், ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு, டி.எஸ்.பி.,யின் மனுவை தள்ளுபடி செய்து, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டது.