விதிமீறல் கட்டடங்களை தடுக்க மாவட்டங்களில் உயர் நிலை குழு
விதிமீறல் கட்டடங்களை தடுக்க மாவட்டங்களில் உயர் நிலை குழு
ADDED : மார் 06, 2024 01:40 AM
சென்னை:விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, மாவட்ட அளவில் உயர்நிலைக்குழு அமைப்பதற்கான உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்கள் மீது, முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆக்கிரமிப்புகள், விதிமீறல் கட்டடங்கள் மீது, உள்ளூர் நிலையிலேயே நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், உயர் நிலைக்குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவில், போலீஸ் கமிஷனர் அல்லது காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி அல்லது நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., துணை இயக்குனர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், துணை கலெக்டர், வருவாய் துறை உயர் அதிகாரி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மின் வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்டோர் இதில் இடம் பெறுவர்.
↓பட்டா நிலங்களில் உள்ள அனுமதி பெறாத கட்டடங்கள்
↓புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் காணப்படும் அனுமதி பெறாத கட்டடங்கள்
↓குடியிருப்புக்கு அனுமதி பெற்று, அதை வணிக மற்றும் வழிபாட்டுக்காக மாற்றப்பட்ட கட்டுமானங்கள்
↓விதிகளை மீறி கட்டப்படும் குடியிருப்புகள், வணிக மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள்.
இதுபோன்ற விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உள்ளூர் அளவில் செயல் திட்டம் தயாரிக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது, இக்குழுவின் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கள ஆய்வு நடத்தி விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

