மோசடியை கண்டுபிடித்த பொறியாளர் இடமாற்றம் : ஐகோர்ட் கிளை கண்டிப்பு
மோசடியை கண்டுபிடித்த பொறியாளர் இடமாற்றம் : ஐகோர்ட் கிளை கண்டிப்பு
ADDED : செப் 30, 2011 11:09 PM
மதுரை: புதுக்கோட்டையில், தார்ச் சாலை அமைத்ததில், 34 லட்ச ரூபாய் மோசடி நடந்ததைக் கண்டுபிடித்த, உதவிப் பொறியாளரை இடமாற்றம் செய்தது தவறு என, ஐகோர்ட் கிளை கண்டித்தது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் ராமசுப்பு. இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
டி.எஸ்.பி., ரோடு - வடுகபட்டி ரோடு இடையே, தார்ச் சாலை அமைத்ததில், 34 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மோசடி நடந்ததைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனருக்கு கடிதம் எழுதினேன். இதனால், என்னை புதுக்கோட்டை கலெக்டர் இடமாற்றம் செய்தார். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி மணிக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜரானார். முறைகேட்டைக் கண்டுபிடித்ததால், மனுதாரர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை இடமாறுதல் செய்தது தவறு. அவர் மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற, கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.