பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தின் சாதனையாளர்கள்; மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தின் சாதனையாளர்கள்; மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு
ADDED : ஜன 26, 2026 10:04 PM

புதுடில்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக சாதனையாளர்களின் பங்களிப்புகள் வரும் தலைமுறை இந்தியர்களுக்கு சிறந்த ஊக்கமளிப்பதாக அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார்.
2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. மொத்தம் 131 பேரில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 40 பேர் ஆகும்.
பட்டியலில் 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இம்முறை 14 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இந் நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தின் சாதனையாளர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார். இது குறித்து அவரின் வாழ்த்துச் செய்தி;
கலை, குடிமைப்பணி, இலக்கியம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தின் சாதனையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகளை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஆர்.கிருஷ்ணன் (மறைவிற்குப் பின்), ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம், சிவசங்கரி மற்றும் கே.விஜய்குமார் ஆகியோரின் பங்களிப்புகள் வரும் தலைமுறை இந்தியர்களுக்கு சிறந்த ஊக்கமளிப்பதாக அமையும்.
இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

