ADDED : மார் 19, 2026 01:34 AM

சென்னை: நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கியது. 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 11ல் துவங்கின. பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 26ம் தேதி; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 6ம் தேதி தேர்வுகள் நிறைவடைகின்றன.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அனைத்து, அரசு மற்றும் தனியார் விடுதிகளில், சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கு வருட பிறப்பை காரணம் காட்டி, ஆதிதிராவிடர் நல விடுதிகளை, இன்று முதல் 22ம் தேதி வரை, நான்கு நாட்கள் மூட, விடுதி காப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
'சிலிண்டர்' தட்டுப்பாடு காரணமாக, பல விடுதிகளில், விறகு அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது. சிலர் விறகு அடுப்பில் சமைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே, நான்கு நாட்கள் விடுதியை மூட திட்டமிட்டு உள்ளோம் என, காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விடுதியிலிருந்த மாணவர்களை ஊருக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

