குறைந்த வருவாய் பிரிவுக்கு மட்டுமே தவணையில் வீடு, மனை விற்பனை வீட்டு வசதி வாரியம் தகவல்
குறைந்த வருவாய் பிரிவுக்கு மட்டுமே தவணையில் வீடு, மனை விற்பனை வீட்டு வசதி வாரியம் தகவல்
UPDATED : ஜூலை 18, 2025 03:35 AM
ADDED : ஜூலை 17, 2025 09:55 PM

சென்னை:குறைந்த வருவாய் பிரிவு வீடு, மனை விற்பனைக்கு மட்டும், தவணை முறையை அமல்படுத்த, வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக வீட்டுவசதி வாரியம் சார்பில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், மனைப்பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இத்திட்டங்களில் வீடு, மனைகள் விற்பனையின் போது, வருவாய் அடிப்படையில் பிரிவுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், உயர் வருவாய் என பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொரு திட்டத்திலும் உருவாக்கப்படும் வீடு, மனைகள், வருவாய் நிலை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இதில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்தும் வசதி இருந்தது. இதனால், பொதுமக்கள் வாரிய திட்டங்களில் வீடு, மனை வாங்குவதில், அதிக ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில், 2022ல் தவணை முறையை கைவிட்டு, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், வீடு, மனைகளை விற்க வாரியம் முடிவு செய்தது.
வாரியத்தின் இந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், வீட்டுவசதி வாரிய திட்டங்களில் குறைந்த வருவாய் பிரிவினர் வீடு வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாரிய திட்டங்களில், வீடு, மனைகளை குலுக்கல் முறையில் ஒதுக்குவதற்கு பதில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை மற்றும் மொத்த கொள்முதல் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அத்துடன், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடு, மனைகளை மட்டுமாவது, தவணை முறையில் வழங்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்தது.
எனவே, முதல் கட்டமாக, விற்பனையாகாத வீடு, மனைகளில் குறைந்த வருவாய் பிரிவினருக்கு தவணை முறையை அமல்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, புதிய திட்டங்களிலும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு தவணை முறையை அமல்படுத்த, அரசிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.