ADDED : மார் 08, 2026 06:14 AM

சென்னை: 'அதிகார மமதையில் தி.மு.க.,வினர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்குவரோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு நாளையும் மக்கள் கழித்து கொண்டிருக்கின்றனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, அதிவேகமாக சென்ற தி.மு.க., கொடி கட்டிய கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தி.மு.க.,காரன் என்ற போர்வையில், உடன்பிறப்புகள் செய்யும் அராஜகங்கள் அளவின்றி தொடர்வது கடும் கண்டனத்திற்கு உரியது மட்டுமின்றி, பெரும் ஆபத்தானதும் கூட.
அதிகார மமதையில் தி.மு.க.,வினர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்குவரோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு நாளையும் தமிழக மக்கள் கழித்து கொண்டிருக்கின்றனர்.
அகலமான தார்ச்சாலையில், ஓரமாக சென்று கொண்டிருந்தவர்களின் மீது காரை மோதும் அளவிற்கு, தி.மு.க.,வினருக்கு துணிச்சலும் அலட்சியமும் மிகுந்துள்ளது அருவருப்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

