செந்தில்பாலாஜி வழக்கில் சாட்சிகள் எத்தனை பேர்? விபரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
செந்தில்பாலாஜி வழக்கில் சாட்சிகள் எத்தனை பேர்? விபரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : டிச 20, 2024 08:03 PM
புதுடில்லி:'தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி மீண்டும் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அவரது வழக்கு தொடர்பான சாட்சியங்களின் நிலைமையை கூர்ந்து கவனிக்கிறோம்' என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், யார் யாரெல்லாம் சாட்சியங்களாக இருக்கின்றனர் என்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற புகாரில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டி, கடந்த ஆண்டு ஜூனில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.
பல கட்ட விசாரணைக்கு பின், கடந்த செப்., 26ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதன் பின், அவர் உடனடியாக அமைச்சராக பதவியேற்றார்.
'வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால், சாட்சியங்கள் அச்சத்தில் உள்ளனர்; இது வழக்கின் விசாரணையை பாதிக்கக்கூடும். எனவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறி, வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், 'செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால் வழக்கு விசாரணையில் சிக்கல்கள் எழலாம்' என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் மற்றும் அமலாக்கத் துறையினர் தங்களது மனுக்களில் குறிப்பிட்ட விஷயங்களை பரிசீலித்த நீதிபதிகள், 'செந்தில் பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதால், வழக்கில் தொடர்புடைய சாட்சியங்கள் என்ன மாதிரியான மன நிலைக்கு ஆளாகி இருப்பர் என்பதை கூர்ந்து கவனித்து வருகிறோம்' என்றனர்.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதே, செல்வாக்கோடுதான் இருந்தார். அப்படிப்பட்டவர், மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது விசாரணையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு கட்டாயம் அச்சம் ஏற்படும்,'' என, முறையிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 'யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை; வழக்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் முழு மனதுடன் உள்ளோம்' என்றனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை, செந்தில் பாலாஜி அலுவலகம் செல்லாமல் இருக்க உத்தரவிட வேண்டும். இல்லை ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' கோரிக்கை விடுத்தார்.
குறுக்கிட்ட நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
இந்த விவகாரத்தில் தமிழக அரசை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக எத்தனை வழக்குகள் இருக்கிறது; வழக்கில் யார் யாரெல்லாம் சாட்சியங்களாக இருக்கின்றனர்; அதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்; அதில் அரசு அதிகாரிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விபரத்தை, வரும் 15ம் தேதிக்குள் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.