உணவு தானிய உற்பத்தி எவ்வளவு? அரசு மீது விவசாயிகள் புகார்
உணவு தானிய உற்பத்தி எவ்வளவு? அரசு மீது விவசாயிகள் புகார்
ADDED : ஏப் 13, 2025 03:09 AM
சென்னை: தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி குறித்த தகவலை, வேளாண் துறை மறைத்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:
தமிழகத்தில் நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் துறை வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, மத்திய --- மாநில அரசுகள் வாயிலாக, பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் நடந்த உணவு தானிய உற்பத்தி குறித்து, வேளாண் துறை வாயிலாக சட்டசபையில் தகவல் வெளியிடப்படுகிறது. சமீபத்தில் வேளாண் துறை மானிய கோரிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, கொள்கை விளக்க புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், நடப்பு ஆண்டு உணவு தானிய உற்பத்தி குறித்த விபரம் இல்லை.
அதற்கு பதிலாக, 'அதிகப்படியான மழை, பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகள், 2024 - 25ம் ஆண்டு ஏற்பட்டன. அவற்றை கடந்து, 2023 - 24ம் ஆண்டை விட கூடுதலாக உணவு தானிய உற்பத்தி அடையக்கூடும்' என கூறப்பட்டு உள்ளது.
நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் உற்பத்தி குறித்த முழுமையான விபரம் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், வரும் 2025 - 26ம் ஆண்டுக்கான உற்பத்தி இலக்கு பற்றி கூறப்பட்டுள்ளது.
அதாவது, நெல் 82.2 லட்சம் டன், சிறுதானியங் கள் 39.2 லட்சம் டன், பருப்பு வகைகள் 8.73 லட்சம் டன் என மொத்தம் 1.30 கோடி டன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

