ADDED : மார் 29, 2025 06:41 AM
திருக்கோவிலுார்: வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து திருக்கோவிலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
திருக்கோவிலுார், என்.ஜி.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன் மகன் பாரதிராஜா,38; இவருக்கும், கீழ்பெண்ணாத்துாரை சேர்ந்த செல்வராஜ் மகள் தேவி, 37; என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அடுத்த சில மாதங்களில், வரதட்சணை கேட்டு தேவியை துன்புறுத்திய பாராதிராஜா, வேறு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதற்கு பாராதிராஜாவின் பெற்றோர் உடந்தையாக இருந்தனர்.
இதுகுறித்து தேவி அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ்குமார், தேவியை துன்புறுத்திய பாராதிராஜாவிற்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.