எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு: விஜய் பற்றிய கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு: விஜய் பற்றிய கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
ADDED : மார் 21, 2026 07:11 AM

சென்னை : ''சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுகிறாரா, இல்லையா என்பதை நான் ஏன் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்? எனக்கு தேர்தல் வேலைகள் அதிகம் உள்ளன,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் டென்ஷனாக கூறினார்.
கமல் நேற்று அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி வெற்றிக்காக, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய உள்ளேன். என் பிரசாரப் பயண திட்டத்தை, கூடிய விரைவில் அறிவிப்பேன். 'இண்டி' கூட்டணியில் நான் சேர்ந்தபோது, 'இந்த கூட்டணி எதற்காக' என கேட்டு, நிறைய பேர் கிண்டல் செய்தனர்.
எனக்கு என்ன லாபம் என்பதை பற்றி யோசிக்காமல், என் கடமையாக, இதை செய்து கொண்டு இருக்கிறேன். 'இண்டி' கூட்டணி, நம் நாட்டுக்கு தேவை.
அந்த காரணத்திற்காக, நானும் இந்த கூட்டணியில் இருக்கிறேன். தேர்தல் வேலை இருப்பதால், ரஜினியுடன் நான் இணைந்து நடிக்கும் படத்திற்கான வேலைகளை, தேர்தல் முடிந்த பின் துவங்குவோம்.
த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறாரா, இல்லையா என்பதை, நான் ஏன் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்? எனக்கு தேர்தல் வேலைகள் அதிகம் உள்ளன. தேர்தலில் போட்டியிட, புதிய முகங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நான் தான், எங்கள் கட்சியிலேயே பழைய முகம். இவ்வாறு அவர் கூறினார்.

