ADDED : ஏப் 13, 2026 05:56 AM

பிரியதர்ஷினி, 22 கல்லுாரி மாணவி, திண்டுக்கல்
பணம், பொருள், நகை என எல்லாத்தையும் சம்பாதிக்க முடியும். ஆனால் சமூக பாதுகாப்பை அரசு மட்டுமே தரமுடியும். ஐந்து ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் போதை கலாசாரத்தால் சீரழிகின்றனர். சர்வசாதாரணமாக போதை வஸ்துகள் புழக்கத்தில் கிடைப்பதை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் இல்லை. விவசாயிகள், வியாபாரிகள், நசிவு தொழில்களை மீட்க தெளிவான திட்டங்கள் இல்லை.
நான் விஜய் ரசிகை. ஆனால், அவரை அரசியல்வாதியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. த.வெ.க.,வில் கட்சி ஒழுக்கம், திட்டமிடல் உள்ளிட்ட விஷயங்களில் சொதப்புவது, 'டிரெண்டிங்' அரசியலுக்கு நல்ல தீனி. அவர் அதிகாரத்தை கைப்பற்ற இன்னும் அனுபவம் வேண்டும்; அரசியலும் பழக வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். அவர் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக உணர்கிறேன். குற்றங்களை ஒடுக்குவதில் அ.தி.மு.க., ஆட்சியில் எந்த சமரசமும் இருந்ததில்லை. அதனால் என் ஓட்டு அ.தி.மு.க.,வுக்கு தான்.
