முதல்வரின் 'அவுட் ஆப் கண்ட்ரோல்' அர்த்தம் இப்பத்தான் புரியுது: சேகர்
முதல்வரின் 'அவுட் ஆப் கண்ட்ரோல்' அர்த்தம் இப்பத்தான் புரியுது: சேகர்
ADDED : ஏப் 22, 2025 10:46 PM
கோவை:'தமிழகம் என்றுமே 'அவுட் ஆப் கண்ட்ரோல்' என்று ஸ்டாலின் கூறியது, அப்போது எனக்குப் புரியவில்லை; அவர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. 'முதலில், அரசு பஸ்களின் சக்கரங்களின் சுழற்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாங்க' என, கூறியிருக்கிறார் பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
அவரது அறிக்கை:
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், அரசு துறைகள் கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடுவதையும், அரசு இயந்திரமே சக்கரம் இல்லாமல், 'அவுட் ஆப் கண்ட்ரோலில்' சுழல்வதையும், சமீபத்தில் அரசு பஸ்ஸின் முன் சக்கரம் ஒன்று கழன்று ஓடிய நிகழ்வே சொல்லாமல் சொல்கிறது.
'ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம்; இதைச்செய்வோம்' என்று, அன்று கூறியவர்கள், இன்று அரசு பஸ்ஸின் சக்கரம் தானாகவே கழன்று ஓடுவதைத்தான், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே கணித்து குறிப்பிட்டனரோ?
'அரசு பஸ்களுக்கு, தரமான சக்கரம் வாங்க, மத்திய அரசு நிதி தரவில்லை' என்று, இதற்கும் ஒரு காரணத்தை மத்திய அரசை நோக்கி உருட்டி விடுவரோ என்னவோ. அரசு பஸ் மக்களுக்கு ஆபத்து; விடியா தி.மு.க., அரசு, தமிழகத்துக்கே பேராபத்து.
இதை மக்கள் தெளிவாக புரிந்துள்ளனர். வரும் தேர்தலில் இது பிரதிபலிக்கும். தமிழகம் என்றுமே 'அவுட் ஆப் கண்ட்ரோல்' என்று ஸ்டாலின் கூறியது, அப்போது புரியவில்லை; இப்போது புரிகிறது. முதலில், அரசு பஸ்களின் சக்கர சுழற்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாங்க.
இவ்வாறு, எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

