கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
UPDATED : ஜூன் 28, 2025 08:35 AM
ADDED : ஜூன் 28, 2025 03:42 AM

சென்னை :  'வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த பெண், சொந்தமாக ஆட்டோ வாங்க உதவ வேண்டும்' என, மகளிர் தின விழாவில் கோரிக்கை வைத்த பெண்ணுக்கு, கவர்னர் ரவி ஆட்டோ வாங்கி கொடுத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், சர்வதேச மகளிர் தின விழா கடந்த மார்ச் 7ம் தேதி கொண்டாடப்பட்டது.
ஆசை
இதில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் பங்கேற்று, தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசினர். இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த விளம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமலா, 34, பங்கேற்றார்.
இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். தினமும் ஊரில் இருந்து பஸ்சில் சென்னை சென்று, ஆட்டோ ஓட்டி வந்தார்.
விழாவில் அவர் பேசும் போது, 'தற்போது வாடகை ஆட்டோ ஓட்டுகிறேன்; எனக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு கவர்னர் உதவ வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
அவர் தமிழில் பேசியதை கவனித்த கவர்னர், மூன்று மாதங்களுக்கு பின், அவரது கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். தன் விருப்ப நிதியில், அமலாவுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.
கவர்னர் மாளிகையில், அமலா மற்றும் அவரது மகள்களிடமும், ஆட்டோவிற்கான சாவியை வழங்கினார்.
அதன்பின், அமலா ஆட்டோ ஓட்ட... அவரது மகள்களுடன், கவர்னர் பின் சீட்டில் அமர்ந்து சிறிது துாரம் சென்றார். அவருக்கு, அமலா மற்றும் அவரது மகள்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து, அமலா கூறியதாவது:
சொந்தமாக ஆட்டோ வாங்குவது, கனவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. யாரிடமும் கைகட்டி வேலை பார்க்கக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தது.
|  | 
மகிழ்ச்சி
மூன்று மாதங்களுக்கு முன், கவர்னரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், ஆட்டோ கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. எனக்கு சொந்தமாக ஆட்டோ கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
தினமும் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, 9:00 மணிக்கு கொட்டிவாக்கம் வருவேன். அங்கிருந்து ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவு 9:00 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு நாளைக்கு 400 ரூபாய் ஆட்டோ வாடகை; மற்ற செலவுகள் போக, கையில் எதுவும் நிற்காது.
கவர்னர் சொந்தமாக ஆட்டோ வாங்கி தந்திருப்பதால், இனி சிரமம் குறையும். என் மகள்களை நன்றாக படிக்க வைப்பேன். கடவுளை நான் கண்டதில்லை, கவர்னரை கடவுள் வடிவில் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

