ADDED : ஆக 07, 2025 03:16 AM
சென்னை:''நானும் காதலித்து கலப்பு திருமணம் செய்தவன் தான். இரு மனங்கள் சேர்ந்து விட்டால், அது திருமணமாக முடிய வேண்டுமே தவிர, கொலையாக மாறக்கூடாது,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு பேசினார்.
ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றக் கோரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தில் ஜாதி குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, அரசு வேலை என நிறுத்திக் கொள்ளாமல், அக்குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டும். ஆணவ படுகொலைகளை தடுக்க, தனி சிறப்பு சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் இயற்ற வேண்டும்,'' என்றார்.
தங்கபாலு பேசுகையில், ''நானும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவன் தான். காதலிக்கும் இரு மனங்கள் சேர்ந்து விட்டால், அது திருமணமாக முடிய வேண்டுமே தவிர, கொலையாக மாறக்கூடாது. காதலிக்கும் பிள்ளைகளிடம் பேசி, அவர்களின் விருப்பத்தை கேட்க வேண்டும். அதை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமை,'' என்றார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில், வி.சி., துணை பொதுச்செயலரும், எம்.எல்.ஏ.,வுமான எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.