ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை நானே வெளியிடுவேன் மதுரையில் அண்ணாமலை 'குண்டு'
ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை நானே வெளியிடுவேன் மதுரையில் அண்ணாமலை 'குண்டு'
ADDED : ஜன 30, 2025 10:00 PM
மதுரை:''சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்தில் கைதான ஞானசேகரன், மொபைல் போனில் யாரிடம் பேசினார் என்ற விபரங்கள் என்னிடம் உள்ளன. போலீஸ் வெளியிடவில்லை என்றால், நானே வெளியிடுவேன்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலை மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகரன் மொபைல் போனில் யாரிடம் பேசினார் என்ற விபரம் என்னிடம் உள்ளது. அதை போலீசார் வெளியிட வேண்டும். இல்லையென்றால், நானே வெளியிடுவேன். அதை சட்டத்திற்கு புறம்பாக தான் பெற்றேன் என்பதும் தெரியும்.
இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., கசிந்தது தொடர்பாக பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்ததன் வாயிலாக, மாநில அரசின் அச்சம் வெளிப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் அவர்கள் கடமையை செய்தனர். அவர்களை கைது செய்தால், அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ., களம் இறங்கும். வழக்கு செலவையும் நாங்களே பார்த்துக் கொள்வோம்.
கொடியேற்றும் பிரச்னையில் பலரை போலீசார் கைது செய்தனர். ஆனால், தி.மு.க., கொடி கட்டி பெண்களை துரத்தியவர்களை போலீசார் கைது செய்யவில்லை. தமிழக போலீசார் புகார் அளிப்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம், வேங்கை வயல் விவகாரம், கிழக்கு கடற்கரை சாலை சம்பவங்களில் போலீசார் பொய்யான அறிக்கைகளையே வெளியிடுகின்றனர். சென்னையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் அங்கேயே பணியாற்ற வேண்டும் என்பதற்காக, இவ்வாறு பொய் அறிக்கைகளை தயார் செய்து வெளியிடுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் கூறியது போல், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானமும், மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களும் தான் உண்மை என்றால், அது தொடர்பான வெள்ளை அறிக்கையை மாநில அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

