மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போராட்டத்தை அனுமதிக்க கூடாது போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போராட்டத்தை அனுமதிக்க கூடாது போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 15, 2025 12:35 AM
சென்னை:'பொது அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த ஒரு போராட்டத்திற்கும், காவல் துறை அனுமதி வழங்கக்கூடாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், வேல் ஏந்தி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
'திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன், வரும் 18ல் சென்னை தங்க சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, பாரத் ஹிந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:
அரசியலமைப்பு என்பது பேச்சு, கருத்து சுதந்திரத்தை உள்ளடக்கியது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், அதை தவறாக பயன்படுத்தக் கூடாது.
மதுரையில் நடந்த போராட்டத்தின் போது, கலவரத்தை துாண்டும் வகையில் செயல்பட்டதற்காக, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரு பிரிவினர் இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., முன் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணப்பட்டது. இது தொடர்பான தீர்மானத்தை, மதுரை கலெக்டரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனவே, திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவத்தை கண்டித்து, சென்னையில் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை.
அப்படி நடத்தினால், அது மற்ற மதத்தினரை மீண்டும் துாண்டச் செய்து, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்துக்கும்,காவல்துறை அனுமதிவழங்கக்கூடாது. மத ரீதியிலான பதற்றங்களை தணிக்க, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை ஹிந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வந்துள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம்.
எனவே, அனைத்து மத, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை, அரசு பேண வேண்டும். மத நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில், எவரையும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இருப்பினும், மனுதாரரும், மற்ற பக்தர்களும், சென்னை ராசப்பா தெருவில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலில் கடவுளை வழிபடலாம். அவர்கள் வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யஉள்ளதாக, பாரத் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு தெரிவித்தார்.