'அமைச்சருக்கு தெரியாது என்றால் அந்த முடிவை எடுத்தது யார்?'
'அமைச்சருக்கு தெரியாது என்றால் அந்த முடிவை எடுத்தது யார்?'
ADDED : நவ 15, 2024 09:01 PM
சென்னை:'ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து, அமைச்சருக்கு தெரியாது என்றால், முடிவெடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள, 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து, தனக்கு தெரியாது என, அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது, கவலை அளிக்கும் உண்மை. பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், சமீபத்தில் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் பணியாற்ற, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, நேற்று முன்தினம் நான் அறிக்கை வெளியிட்டேன். அடுத்த சிறிது நேரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ், 'இது குறித்து எனக்கு தெரியாது. விசாரித்து சொல்கிறேன்' எனக் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கடந்த 7ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது அமைச்சருக்கே தெரியவில்லை என்பதை ஏற்க முடியவில்லை.
இது, இரு துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே, அமைச்சர் நிலையில் விவாதித்து, முடிவு எடுக்கப்படாமல், ஆசிரியர்களை இன்னொரு துறைக்கு அனுப்புவது சாத்தியம் இல்லை. அமைச்சருக்கே தெரியாமல், துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்புகிறார் என்றால், அந்த முடிவை எடுத்தவர் யார்? இதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டியது, அரசின் கடமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.