தகவல் இல்லை என்றால் சான்றுடன் தெரிவியுங்கள்: தகவல் ஆணையம் உத்தரவு
தகவல் இல்லை என்றால் சான்றுடன் தெரிவியுங்கள்: தகவல் ஆணையம் உத்தரவு
ADDED : ஜூலை 10, 2026 05:06 AM

சென்னை: ''தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கோரி மனு செய்யும்போது, அந்த தகவல் இல்லை என்றால், அதை சான்றுடன் தெரிவிக்க வேண்டியது அவசியம்,'' என,தகவல் ஆணையர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலமாசி வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், மதுரை மண்டல கலை பண்பாட்டு மையத்தில், 2021ம் ஆண்டு, செப்., முதல் அக்., வரை, கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட குறிப்பாணைகளை பார்வையிட அனுமதி கோரி, பிப்., 2024ல் ஆர்.டி.ஐ., கீழ் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு, உரிய பதில் கிடைக்காததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், ஜூன் 2024ல் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தகவல் ஆணையர் அதுல்ய மிஸ்ரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொது தகவல் அலுவலர் சார்பில் ஆஜரான உதவி இயக்குநர்,''மனுதாரர் கோரிய ஆர்.டி.ஐ., தகவல்களை, மார்ச் 2024ல் வழங்கி விட்டோம்.
''மேலும், அவர் கோரிய பதிவுகள் 2021ம் ஆண்டை சேர்ந்தவை என்பதால், தற்போது அவை, அலுவலக பாரமரிப்பில் இல்லை,'' என, விளக்கம் அளித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட ஆணையர், ''மனுதாரர் கோரிய பதிவுகள் அலுவலக பராமரிப்பில் இருந்தால், ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ், சட்டப்படி அவற்றை வழங்க வேண்டும்.
''அவ்வாறு, பதிவுகள் இல்லை என்றால், அவை அலுவலக பராமரிப்பில் இல்லை என்பதை சான்றொப்பமிட்டு, மனுதாரருக்கு தெரிக்க வேண்டியது அவசியம். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
