வாழ்க்கையை ரசித்து பயணித்தால் மன அழுத்தம் வராது: புகழேந்தி கல்வியாளர் புகழேந்தி 'ஆலோசனை'
வாழ்க்கையை ரசித்து பயணித்தால் மன அழுத்தம் வராது: புகழேந்தி கல்வியாளர் புகழேந்தி 'ஆலோசனை'
ADDED : நவ 24, 2024 07:12 AM

'தினமலர்' நடத்திய மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் கல்வியாளர் புகழேந்தி பேசியதாவது:
வகுப்பறையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் மாணவ, மாணவிகள் தனித்துவமான படைப்புகள். அவர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள் வேறு; எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் வெவ்வேறு.
ஆனால் அவர்களை நாம் ஒன்றாக மதிப்பெண் எனும் தட்டில் வைத்து பார்க்கும்போதுதான் மன அழுத்த பிரச்னையே எழுகிறது.
ஆசிரியர்களான நீங்கள் மாணவர் பருவத்தில், பெற்றோர், ஆசிரியரிடம் சந்தித்த அதே பிரச்னைகளைத்தான் தற்போது மாணவர்கள் சந்திக்கின்றனர். அதே கண்டிப்பை இன்றைய மாணவர் சமுதாயத்தினர், வீட்டிலும், பள்ளிகளிலும் எதிர்நோக்குகின்றனர். காலங்கள் மாறினாலும் இதுதான் நடக்கிறது.
நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்த மாணவரைவிட, கடைசி பெஞ்சியில் உங்களை தெறிக்கவிட்ட மாணவர்தான் ஆசிரியர்களை கடைசி வரைக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். நன்றாக படிக்கும் மாணவர் தன்னுடைய உழைப்பினால்தான் படித்தேன் என்று கூறுவார். ஆனால், சுமாராக படிக்கும் கடைசி பெஞ்ச் மாணவர், உலகமே கைவிட்டபோதிலும், ஒத்த ஆளா நின்று படிக்க வைக்க நீங்கள் பாடுபட்டு இருப்பீர்கள். அதனை என்றைக்குமே அவன் மறக்கப்போவதில்லை. வகுப்பில் இப்படிபட்ட மாணவர்கள் 45 சதவீதம் பேர் இருப்பர்.
மாணவர்களை காலையில் கண்டிக்கும்போது, மாலையில் அதனை ஆசிரியர்களே விலக்கி கொள்ளுங்கள். இந்த காரணத்தால் தான் உன்னை கண்டித்தேன் என்று மாணவர்களை அழைத்து புரிய வைத்து, பாராட்டி பாருங்கள். அவர்களுக்குள் புதிய மாற்றம்உருவாததை கண்கூடாகவே பார்க்க முடியும்.
வாழ்க்கை பாதையில் நாம் மற்றவர்களுடன்தொடர்ந்து பயணிக்கிறோம். வாழ்வில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அந்த பாதையில் உடன் வந்தவர்களை நாம் நினைவில் வைத்துக் கொள்கிறோம்.
இந்த பயணத்தில் அவர்களுடைய வழியை நாம் பரஸ்பர பொறுப்பேற்று பயணிக்கிறோம். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை நாம் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. அவருடைய வழி வேறு; நம்முடைய வழி வேறு.
வாழ்க்கை அழகியல் சார்ந்த விஷயம். நம்முடைய வாழ்க்கை நம்முடையது. நம் சந்தோஷத்தை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும்.
நம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களிடம் நாம் கொடுத்துவிட்டு, தொலைந்து போய்விட கூடாது. வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து தினமும் மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும்.
அதேபோல் வாழ்க்கை பயணத்தில் மாற்றமும் ஏற்பட்டுகொண்டே தான் இருக்கும்.
இதுதான் வாழ்க்கையின் இயல்பான அழகு, எனவே, உங்களின் வயது அதிகரிப்பு உள்ளிட்டஅனைத்து மாற்றங்களை வாழ்வில் ஏற்று கொண்டு மகிழ்ச்சியாகவே இருங்கள்.வாழ்க்கையை ரசித்து பயணித்தால் மன அழுத்தம் எப்போதுமேஇருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.