ஐ.ஐ.டி., - இன்ஜி., படிப்பில் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு
ஐ.ஐ.டி., - இன்ஜி., படிப்பில் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு
UPDATED : பிப் 07, 2024 02:03 AM
ADDED : பிப் 06, 2024 11:00 PM

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:
பிளஸ் 2 முடித்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், விளையாட்டு வீரர்களாக இருந்தால், அவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து அறிமுகமாகிறது.
வாய்ப்புகள் உண்டு
ஐ.ஐ.டி.,க்களில் முதன்முறையாக, சென்னை ஐ.ஐ.டி.,யில் தான் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் விளையாட்டு அனுபவங்களுடன், அதற்கேற்ற தொழில்நுட்பத்தையும் சேர்த்து படித்தால், வரும் காலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இதனை கருத்தில் கொண்டு, விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு முதல் முறையாக அமல்படுத்தப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டை பெற விரும்பும் மாணவர்கள், ஜே.இ.இ., மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்த கல்வித்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதிலுள்ள முன்னணி தர வரிசை அடிப்படையில், மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
தரவரிசைப் பட்டியல்
தேசிய அளவில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்த விளையாட்டுகளில், தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, விளையாட்டு பிரிவுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு அமலுக்கு வரும்.
இளநிலை பட்டப்படிப்பின் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், தலா இரு இடங்கள் ஒதுக்கப்படும். அதில், ஒரு இடம் பெண்களுக்கு வழங்கப்படும்.
இந்த சேர்க்கை நடைமுறை, ஐ.ஐ.டி.,யன் ஒருங்கிணைந்த ஆன்லைன் முறையில் இல்லாமல், சென்னை ஐ.ஐ.டி., வழியே தனியாக நடத்தப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

