அஜித் படத்தில் தன் பாடல்களை நீக்கக்கோரி இளையராஜா வழக்கு
அஜித் படத்தில் தன் பாடல்களை நீக்கக்கோரி இளையராஜா வழக்கு
ADDED : செப் 06, 2025 01:10 AM
சென்னை:நடிகர் அஜித் நடித்த, குட் பேட் அக்லி திரைப்படத்தில், அனுமதியின்றி தன் பாடல்களை பயன்படுத்தியதை எதிர்த்து, இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில், அஜித் நடிப்பில், குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இதில், 'இளமை இதோ இதோ... ஒத்த ரூபாயும் தாரேன்... என் ஜோடி மஞ்ச குருவி' போன்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாகக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
'என் அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது. எனவே, படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்; உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.