ADDED : ஜூலை 12, 2025 02:11 AM
சென்னை:நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், 'சிவராத்திரி துாக்கம் ஏது' என, இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குனர் ராபர்ட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படம், நேற்று தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1990ல் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற, 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற, பாடல் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தான் இசையமைத்த பாடலை, தன் அனுமதியின்றி, மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், பாடலை மாற்றி அமைத்து உள்ளதாகவும், இளையராஜா தரப்பில், சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுவில், 'இது, காப்புரிமை சட்டத்தை மீறிய செயல். உடனே பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் முறையீடு செய்தார்.
இதையடுத்து நீதிபதி, ஜூலை 14ம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.